புதுச்சேரி அரசு பஸ் மோதி செய்யூர் அருகே இருவர் பலி
செய்யூர், திருவாரூர் மாவட்டம், கமலாபுரத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ், 36.இவர் நேற்று மாலை, விழுப்புரத்தைச் சேர்ந்த நண்பர் சந்துரு, 26, என்பவருடன், தன் இருசக்கர வாகனத்தில், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்றார்.மாலை 5:00 மணியளவில், செய்யூர் அருகே, இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட விளம்பூர் கிராமத்தில் சென்ற போது, எதிரே வந்த புதுச்சேரி அரசு பேருந்து, இவரது இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு, நிற்காமல் சென்றது.இந்த விபத்தில், சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.பலத்த காயமடைந்த காரல் மார்க்ஸ், ஆபத்தான நிலையில் ஆம்புலன்ஸ் வாயிலாக, செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த சூணாம்பேடு போலீசார், சந்துரு உடலை கைப்பற்றி, மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.கூவத்துார் போலீசார், விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை, கூவத்துார் பகுதியில் மடக்கிப் பிடித்தனர்.பின், பேருந்தை பறிமுதல் செய்து, சூணாம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விபத்து குறித்து சூணாம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.