| ADDED : டிச 28, 2025 06:08 AM
மதுராந்தகம்: மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை, பொது ஏலம் விட வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், மண் திருட்டில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில் இந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், துருப்பிடித்து வீணாகி வருகின்றன. அத்துடன், அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்கள், அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் இந்த வாகனங்களை ஆய்வு செய்து, பொது ஏலம் விட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.