| ADDED : ஜூன் 01, 2024 12:18 AM
சென்னை,மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 600-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இவற்றில், தினமும் 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். காலை, மாலை அலுவலக நேரங்களில், மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, மாணவர்கள் உள்ளிட்டோர் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்கின்றனர்.இதைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் செய்தால், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும் என, மாநகர பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.எனினும், பேருந்து படிக்கட்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எனவே, படிக்கட்டு பயணத்தை முழுமையாக தடுக்கும் வகையில், கதவுகள் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகளை அடையாளம் கண்டு, தானியங்கி கதவுகளை பொருத்த, மாநகர போக்குவரத்துக் கழகம் முடிவு செய்தது.அதன்படி இதுவரை, 448 பேருந்துகளில் தானியங்கி கதவு பொருத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட பதிவு: பயணியர் பாதுகாப்பு கருதி, மாநகர போக்குவரத்துக் கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, மாநகர பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 448 பேருந்துகளில் கதவுகள் இல்லை என கண்டறியப்பட்டது. இதையடுத்து முதல்கட்டமாக 200 பேருந்துகளிலும், இரண்டாவது கட்டமாக 248 பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.