| ADDED : ஜூலை 08, 2024 01:40 AM
படப்பை:வண்டலுார் - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 26.64 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்கும் பணி, 2022 ஜனவரியில் துவங்கி, தற்போது வரை மந்தகதியில் நடக்கிறது.பாலம் கட்டுமான பணிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சாலை குறுகலாகி உள்ளது. இதனால், வழக்கத்தைவிட இரு மடங்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக, படப்பை பஜாரில் பாலம் கட்டும் பணி முடியும் வரை, பீக் ஹவர்ஸ் நேரமான காலை 8:00 - 10:00 மணி வரை, மாலை 6:00 - 8:00 மணி வரை, கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில், கடந்த 28ம் தேதி செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, படப்பையில் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கனரக வாகனங்கள் செல்ல, மணிமங்கலம் போலீசார் தடை விதித்துள்ளனர்.