தாம்பரம், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள, 15 ஊராட்சிகளின் மக்கள் தொகை, வருமானம், குடியிருப்புகள் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, தேவையான திட்டங்களை வகுக்கும் நடவடிக்கையில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தாம்பரம், செம்பாக்கம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார் நகராட்சிகள்; பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பேரூராட்சிகள் ஆகியவற்றை இணைத்து, புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.அடுத்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தாம்பரம் மாநகராட்சியுடன், சுற்றியுள்ள 15 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. அதனால் எதிர்கால திட்டமாக, 15 ஊராட்சிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த குடிநீர், மழைநீர் கால்வாய், பாதாள சாக்கடை திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து, அத்திட்டங்களுக்கு அறிக்கை தயார் செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்த ஊராட்சிகள், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படும்.இந்நிலையில், 15 ஊராட்சிகளின் தலைவர், செயலர்கள் ஆகியோர் உடனான கலந்தாய்வு கூட்டம், தாம்பரம் மாநகராட்சியில் நேற்று நடந்தது. இதில், ஒவ்வொரு ஊராட்சியின் மக்கள் தொகை, குடியிருப்பு, வருமானம், குப்பை சேகரிப்பு வாகனங்கள், நிரந்தர ஊழியர்கள், குப்பை, சாலைகள், மின் விளக்கு, தற்காலிக ஊழியர்கள் உள்ளிட்ட முழு விபரங்களை, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.இந்த விபரங்களை கொண்டு, தேவையான திட்டங்கள் வகுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஊராட்சிகள்
1. வேங்கைவாசல்2. நன்மங்கலம்3. கோவிலம்பாக்கம்4. மேடவாக்கம்5. பெரும்பாக்கம்6. சித்தாலப்பாக்கம்7. ஒட்டியம்பாக்கம்8. அகரம்தென்9. மதுரபாக்கம்10. திருவஞ்சேரி11. முடிச்சூர்12. கவுல்பஜார்13. மூவரசம்பட்டு14. பொழிச்சலுார்15. திரிசூலம்