| ADDED : ஆக 11, 2024 01:41 AM
குரோம்பேட்டை:குரோம்பேட்டையில், எம்.ஐ.டி., ரயில்வே பாதையை கடக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் லட்சக்கணக்கான வாகனங்கள் தினமும் செல்கின்றன.மேம்பாலத்தின் மேற்கு பகுதியில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை ஒட்டிச் செல்லும் அணுகு சாலை, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படும் நிலையில், சாலையை சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் நேற்று, சாலையில் படுத்து போராட்டம் நடத்தப்பட்டது.அச்சங்கத்தினர் கூறியதாவது:அணுகு சாலையில், மின் வாரியம் சார்பில் வடம் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. அப்பணி முடிந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. தோண்டப்பட்ட இடங்களில் சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறைக்கு, 4.5 கோடி ரூபாயை, மின் வாரியம் செலுத்தியுள்ளதாக கூறுகிறது.அப்படியிருந்தும், சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால், ஒவ்வொரு நாளும், மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.