சென்னை, ஏப். 23-'சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், 14.58 கோடி ரூபாயில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள், அடுத்த ஆறு மாதங்களில் முடியும்' என, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை ரயில் கோட்டத்தில், 'அம்ரித் பாரத்' நிலைய திட்டத்தின் கீழ் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, சூலுார்பேட்டை, செங்கல்பட்டு, அம்பத்துார், பரங்கிமலை, கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா மற்றும் சென்னை கடற்கரை உட்பட, 15 ரயில் நிலையங்களில், மேம்பாட்டுப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.இந்த திட்டத்தின் கீழ், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கூரைகள், 'எஸ்கலேட்டர்'கள், நடைமேம்பாலம், மின்துாக்கி, கண்காணிப்பு கேமரா, உணவகங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையிலும், பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:சென்னை கோட்டத்தில் முதல்கட்டமாக, 15 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில், 14.58 கோடி ரூபாய் மதிப்பில், பயணியருக்கான அனைத்து வகை மேம்பாட்டு வசதிகளுடன், பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ரயில் நிலையத்தில், 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. அடுத்த ஆறு மாதங்களில், பணிகள் அனைத்தும் முடிந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.