உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விடிய விடிய மழை 31 விமான சேவை பாதிப்பு

விடிய விடிய மழை 31 விமான சேவை பாதிப்பு

சென்னைசென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள், வர வேண்டிய விமானங்கள் என, 31 சேவைகள் பாதிக்கப்பட்டன.இதில், உள்நாட்டில் டில்லி, அயோத்தி, லக்னோ, ஹைதராபாத், ராஞ்சி, மும்பை, கோழிக்கோடு, கவுகாத்தி மற்றும் வெளிநாடுகளான பக்ரைன், பிராங்பார்ட்.துபாய் நகரங்களில் இருந்து சென்னை வந்த விமானங்கள், தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக தொடர்ந்து வானில் வட்டமடித்தன.நான்கு விமானங்கள், பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மற்ற விமானங்கள், மழை நின்றபின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறக்கப்பட்டன.மேலும், சென்னையில் இருந்து மும்பை, டில்லி, கோல்கட்டா, கோவை, மங்களூரு, ஹைதராபாத், பெங்களூரு, கொச்சி, துபாய், பக்ரைன், குவைத், தோகா, பிராங்பார்ட், இலங்கை உட்பட 16 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள் மழை நின்றபின் சென்னைக்கு திரும்பி வந்தன.

அயோத்தி ரத்து

சென்னையில் இருந்து அயோத்திக்கு, தினமும் காலை 8:35 மணிக்கும், அயோத்தியில் இருந்து சென்னைக்கு மாலை 5:45 மணிக்கும் 'ஸ்பைஸ்ஜெட்' விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று பயணியர் வருகை குறைவாக இருந்ததால், இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. டிக்கெட் 'புக்கிங்' செய்த பயணியருக்கு விரும்பும் தேதியில் மாற்றித் தருவதாக கூறப்படுகிறது.

அந்தமானில் வட்டமடித்த விமானம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்லும் 'ஏர் இந்தியா' பயணியர் விமானம், நேற்று காலை 5:30 மணிக்கு, 138 பயணியருடன், அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்றது.காலை 7:30 மணி அளவில், அந்தமான் வான் வெளியை நெருங்கியது. அந்நேரம், அதிக சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம், அந்தமானில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. வானிலை சீரடையாததால், விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார். அவர்கள் அறிவுறுத்தலின்படி. விமானம் நேற்று காலை 11:15 மணிக்கு, மீண்டும் சென்னை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ