சென்னை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி., எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு; எல்.என்.ஜி., எனும் திரவ இயற்கை எரிவாயு வாயிலாக பேருந்துகளை இயக்க, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.அந்த வகையில், பிராட்வே - சிறுசேரிக்கு இயக்கப்படும் வழித்தடம்: 102 மாநகர பேருந்து, தனியார் நிறுவனம் வாயிலாக சி.என்.ஜி., வகையாக, கடந்த 28ம் தேதி மாற்றம் செய்யப்பட்டது.இதற்கிடையே, கடந்த 2ம் தேதி அடையாறு பணிமனை அருகே இப்பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டது.எரிந்து நாசமான பேருந்தை, அடையாறு பணிமனைக்கு கொண்டு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த நிலையில், கே.கே.நகர் பணிமனையில் சோதனை முயற்சியில் இயக்கப்படும், இரண்டு எல்.என்.ஜி., பேருந்துகளின் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் சி.என்.ஜி.,யில் ஒரு பேருந்தும், எல்.என்.ஜி.,யில் இரண்டு பேருந்துகளும் இயக்கப்பட்டன. சி.என்.ஜி.,க்கு மாற்றப்பட்ட பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பயணியர் பாதுகாப்பு கருத்தில் வைத்து இரண்டு எல்.என்.ஜி., பேருந்துகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், விழுப்புரம் மற்றும் கும்பகோணத்தில் இயக்கப்படும் சி.என்.ஜி., எல்.என்.ஜி., பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.