உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இடியும் நிலையில் ரேஷன் கடை சென்னீர்குப்பத்தில் விபத்து பீதி

இடியும் நிலையில் ரேஷன் கடை சென்னீர்குப்பத்தில் விபத்து பீதி

பூந்தமல்லி, சென்னீர்குப்பம் ஊராட்சியில், எந்த நேரத்திலும் இடியும் நிலையிலுள்ள ரேஷன் கடை கட்டடத்தால், பொதுமக்கள் கடையின் உள்ளே செல்ல அச்சப்படுகின்றனர்.பூந்தமல்லி ஒன்றியத்தில் சென்னீர்குப்பம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, அரசு நியாய விலை கடை இயங்குகிறது. இந்த கட்டடத்தின் மேல்தளம் முழுதும் விரிசல் விட்டு சேதமாகி, எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், விரிசல் வழியே மழைநீர் உள்ளே கசிவதால் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வீணாகின்றன.தண்ணீர் கசிவை தடுக்க, கட்டடத்தின் மேல் தளத்தில் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், உடனே அவ்விடத்தில் புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த ரேஷன் கடையில் 1,600 கார்டுதாரர்கள் வரிசையில் காத்திருந்து பொருட்களை வாங்குகிறோம். கட்டடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், இந்த கடையின் உள்ளே செல்லவே அச்சமாக உள்ளது.அசம்பாவிதம் நடைபெறும் முன், இந்த கடையை மாற்றியமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதுகுறித்து கூட்டுறவு துறை அலுவலர்கள் கூறுகையில்,'இந்த கடையை இடித்து அகற்றி, அதே இடத்தில் புதிய கடை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் ரேஷன் கடையை தற்காலிகமாக இடம் மாற்றி, புதிய ரேஷன் கடையின் கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்