திருப்போரூர்,:பழைய மாமல்லபுரம் சாலை, சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை 42 கி.மீ., துாரம் உள்ளது.கடந்த 2006ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின் போது, இச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, சிறுசேரி சிப்காட் பூங்கா வரை ராஜிவ்காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது.கடந்த 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டசபையில் 110 விதியின் கீழ், சிறுசேரியில் இருந்து கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக பூஞ்சேரி வரை ஆறு வழிச்சாலை அமைக்கப்படும் என, அறிவித்தார்.இதற்காக, பல பகுதிகளில் நிலங்களை அரசு கையகப்படுத்தியது. ஓ.எம்.ஆர்., சாலையில், சிறுசேரி, ஏகாட்டூர், வாணியஞ்சாவடி, கழிப்பட்டூர், படூர், திருப்போரூர், ஆலத்துார் உள்ளிட்ட பகுதிகளில் அரசு கையகப்படுத்திய நிலத்தில் 13 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து, 1,075 கோடி ரூபாய் மதிப்பிலான 24.17 ஏக்கர் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, படிப்படியாக மீட்டுள்ளனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளில், விரிவாக்கப் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இவற்றில், படூர் ரவுண்டானா அருகே, எதிர்ப்பு காரணமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் விடப்பட்டிருந்தன. நேற்று நெடுஞ்சாலைத் துறையினர், 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன், இப்பகுதிக்கு சென்று, 10க்கும் மேற்பட்ட வீடு, வணிக கடைகளை பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர். அப்போது, ஆக்கிரமிப்பு ஆதரவாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட தி.மு.க., படூர் ஊராட்சி தலைவர் தாராவின் கணவர் சுதாகர், வார்டு கவுன்சிலர் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்து, கேளம்பாக்கம் சமுதாயநலக் கூடத்தில் வைத்து, மாலையில் விடுவித்தனர்.மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு, 30 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, வருவாய் துறைக்கு சொந்தமான மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 20 சென்ட் தரிசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆக்கிரமிப்பு புகாரை தொடர்ந்து, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு, எச்சரிக்கை பலகை வைத்தனர்.காட்டாங்கொளத்துார் ஒன்றியம், நல்லம்பாக்கம் ஊராட்சி பகுதியில், அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலம் அதிகளவில் உள்ளது.இந்த இடத்தில், 25 சென்ட் அளவு நிலத்தை ஆக்கிரமித்து, வீடு கட்டுவதற்கான கட்டுமான பணி துவங்கப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதிவாசிகள் வண்டலுார் தாசில்தாருக்கு புகார் அளித்தனர். அதன்படி, நேற்று முன்தினம், தாசில்தார் புஷ்பலதா தலைமையில் கட்டுமானப் பணியை நிறுத்தி, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டனர்.
வரும் 8ல் நடவடிக்கை
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு சப்- - கலெக்டர் நாராயண சர்மா தலைமையில் குழு அமைத்து, கலெக்டர் அருண்ராஜ் கடந்த மாதம் உத்தரவிட்டார். இந்த குழுவினர், செங்கல்பட்டு முதல்- பல்லாவரம் வரை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், நடைபாதை கடைகள், வாகனங்கள் நிறுத்தம், ஆட்டோ நிறுத்துமிடங்களாக சர்வீஸ் சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருவது தெரிந்தது.அதனால், மகேந்திரா வேர்ல்டு சிட்டி முதல்- பொத்தேரி வரை, அணுகு சாலையின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை, வரும் 8ம் தேதி அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதனால், ஆக்கிரமிப்பாளர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புக்களை அகற்றுமாறு, வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.