| ADDED : ஜூலை 27, 2024 12:20 AM
திருவொற்றியூர், மீஞ்சூர், புங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், 36; கன்டெய்னர் லாரி ஓட்டுனர். இவரது மகன் பிரவீன், 8. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், சிறப்பு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று மாலை, வீட்டருகே சைக்கிள் ஓட்டிய சிறுவன், திடீரென மாயமானார். பெற்றோர் தேடியும் கிடைக்கவில்லை.உடனே, மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனிடையே, நேற்று மாலை, 6:00 மணியளவில், மணலி விரைவு சாலை - சத்தியமூர்த்தி நகர் சந்திப்பில், கன்டெய்னர் லாரி போக்குவரத்து மிகுந்த சாலையில், சிறுவன் சைக்கிளில் தாறுமாறாக சென்றுள்ளான்.அங்கிருந்தோர் அவனை பிடித்து விசாரித்த போது, அவன் பதில் கூறாததால், சாத்தாங்காடு போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.போலீசார் பேச்சுக் கொடுத்து விசாரித்ததில், அவன் வழி தவறி வந்தது தெரிந்தது. பின், சிறுவன் மாயமானதாக மற்ற காவல் நிலையங்களில் புகார் வந்துள்ளதா என, ஆய்வு செய்தனர்.அதில், மீஞ்சூரில் சிறுவன் பிரவீன் மாயமான புகார் குறித்து அறிந்து, அவனது பெற்றோரை மொபைல்போன் வாயிலாக அழைத்து, பத்திரமாக ஒப்படைத்தனர்.