பெரும்பாக்கம், பெரும்பாக்கத்தில் நாட்டு வெடிகுண்டு, அரிவாளுடன் பதுங்கியிருந்த ஆறு வாலிபர்களில் மூவரை பிடித்த போலீசார், தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.பெரும்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர்கள் லிங்கமுகிலன், சிவா இருவரும், கடந்த 6ம் தேதி காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்தாலப்பாக்கம், திருவள்ளுவர் நகர், ஒன்பதாவது தெருவில், புதர் மறைவில் ஆறு வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனர்.அவர்களை பிடித்து விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். அவர்களை சோதனை செய்த போது, அவர்களிடம் நாட்டு வெடிகுண்டு, அரிவாள் ஆகிய பயங்கர ஆயுதங்கள் இருந்தன.தொடர் விசாரணையில் அவர்கள், சித்தாலப்பாக்கம் திருவள்ளுவர் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்த யுவராஜ், 22, இந்திரா நகரைச் சேர்ந்த சரண்ராஜ், 22, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கவின், 21, யோகேஸ்வரன், 22, ஜேசுராஜ், 23, மற்றும் ஒரு சிறுவன் என தெரிந்தது.ரோந்து போலீசார் இருவரும், இவர்களை கைது செய்ய முயன்ற போது, ஆறு பேரும் தப்பிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆறு பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.நேற்று முன்தினம் யுவராஜ், சரண்ராஜ் மற்றும் சிறுவன் மூவரும், போலீசாரிடம் சிக்கினர். பின், நீதிமன்ற உத்தரவின்படி, சிறுவன் சீர்திருத்தப் பள்ளியிலும், மற்ற இருவர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். தலைமறைவான கவின், யோகேஸ்வரன், ஜேசுராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.