உத்திரமேரூர், திருமுக்கூடலில், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் காலனியைச் சேர்ந்தவர் குமரவேல், 31. இவருக்கு மாவட்ட நிர்வாகம் வாயிலாக, இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.இந்த மனை பட்டாவை கிராம கணக்கு பதிவேட்டில் பதிவேற்ற, திருமுக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன், 44, என்பவரிடம் விண்ணப்பித்தார்.இதற்கு கருணாகரன், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத குமரவேல், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தலின்படி, கருணாகரனை திருமுக்கூடல்- - சாலவாக்கம் சாலையில், அருங்குன்றம் அருகே நேற்று வரவழைத்து, ரசாயனம் தடவிய 15,000 ரூபாயை குமரவேல் கொடுத்துள்ளார்.அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கருணாகரனை கைது செய்தனர். பின், திருமுக்கூடல் ஊராட்சி அலுவலக கட்டடத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.அப்போது, அவரிடம் பல்வேறு சான்றுகள் பெற விண்ணப்பித்து, பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்த பலரும் அங்கு குவிந்தனர். அவர்களிடம், 10,000 முதல் 90,000 ரூபாய் வரை, கருணாகரன் லஞ்சம் வாங்கியதை அறிந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ந்தனர். அப்போது, பணத்தை திரும்ப மீட்டு தருமாறும் அல்லது தாங்கள் கேட்ட சான்றிதழ்களை வழங்க உதவுமாறும், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கோரினர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர்.