திடீரென சாய்ந்த ராட்சத மரம் பறவைகள் சத்தத்தால் சோகம்
கொரட்டூர்: கொரட்டூரில் பழமையான மரம் திடீரென சாய்ந்ததால், அதில் வசித்து வந்த பறவைகள், சத்தம் போட்டபடி அங்கும், இங்குமாக சுற்றித்திருந்தது சோகத்தை ஏற்படுத்தியது. கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 31வது தெருவில் உள்ள, 50 ஆண்டுகள் பழமையான மரத்தின் வேர் பகுதி வலுவிழந்து காணப்பட்டது. நேற்று அதிகாலை திடீரென, அருகில் உள்ள மற்றொரு மரத்தின் மீது சாய்ந்தது. மரத்தில் கூடு கட்டி வசித்து வந்த கிளி உள்ளிட்ட பறவைகள், சத்தம் எழுப்பியபடி, அங்கும் இங்கும் சுற்றிதிரிந்தது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மரம் சாய்ந்தது குறித்து, கொரட்டூர் போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி பணியாளர்கள், மரத்தின் வேர் பகுதிகளை விட்டுவிட்டு, கிளைகளை வெட்டி அகற்றினர். மரத்தின் வேர் பகுதி, மற்றொரு நாளில் அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.