செம்மஞ்சேரி: பத்துக்கும் மேற்பட்ட காவல் நிலைய போலீசாரால், திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த வாலிபர், செம்மஞ்சேரியில் பிடிபட்டார். சோழிங்கநல்லுார், கிராம நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் சந்தனமாரி, 37. கடந்த 20ம் தேதி, இவரது இருசக்கர வாகனம் திருடு போனது. செம்மஞ்சேரி போலீசார், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர். அப்போது, கண்ணகி நகர், நீலாங்கரை, கானத்துார், பள்ளிக்கரணை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட காவல் நிலைய எல்லைகளில் நடந்த திருட்டு சம்பவங்களில், கேமரா பதிவுகளில் உள்ள நபரும், சந்தனமாரி வாகனத்தை திருடிய நபரும் ஒரே நபர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, செம்மஞ்சேரி காவல் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், இ.சி.ஆரில் வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த அஜித்குமார், 20, என தெரிந்தது. நேற்று, அவரை கைது செய்து விசாரித்ததில், சிறு வயது முதல் அவர், திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. பைக், பேட்டரி, கோவில் உண்டியல், மொபைல் போன், செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டதும் தெரிந்தது. பல்வேறு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து, மூன்று மாதங்களாக தேடி வந்த நிலையில், செம்மஞ்சேரி போலீசாரிடம் சிக்கினார். அவரை நேற்று கைது செய்த போலீசார், மூன்று இருசக்கர வாகனங்கள், உண்டியல் பணம், பேட்டரி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.