| ADDED : ஜன 07, 2024 12:42 AM
இறைவனோடு தர்க்கம் புரிந்து, கேள்விகள் கேட்ட நக்கீரனாரால் பாடப்பட்டதே 'நெடுநல்வாடை' எனும் இலக்கியம்.கேள்வி கேட்பதற்கு வாசிப்பு பழக்கம் அவசியம். ஒருவரின் கேள்வி ஞானத்தை அதிகரிப்பது, வாசிப்பு பழக்கம்தான். அன்றைய தமிழர்கள், ஒட்டுமொத்த மனித இனத்திற்காக சிந்தித்தனர். அவர்களின் சிந்தனை, உலகம் முழுதுக்கும் பொதுவானதாக இருந்தன. நக்கீரனார் 'உலகம் உவப்ப' என, 'திருமுருகாற்றுப்படை'யில் உரைக்கிறார். பெரிய புராணம் தந்த சேக்கிழார், 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்' என்கிறார்.இன்றைய தலைமுறை வாசிக்கவும், யோசிக்கவும் தயாராக இல்லாமல், 'ஆண்ட்ராய்டு' போன்களில் நேரத்தைப் போக்குகிறது. வாசிக்கும் பழக்கம் வசமாகினால், அது வாழ்க்கையை வசப்படுத்தும் என்பதை, இளைஞர்கள் உணர வேண்டும்.மோகன்சந்த் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், மகாத்மா காந்தியாக மாறுவதற்கு புத்தகங்களே காரணமாக இருந்தன.காந்தியின் எழுத்துக்களை வாசித்தார், நெல்சன் மண்டேலா. அதனால்தான், 28 ஆண்டுகள் சிறையில் இருந்து வெளியே வந்தபோது, தன்னை சிறைப்படுத்தியவர்களை தண்டிக்காமல், 'அவர்கள் செய்தவற்றை மறப்போம்' என்றார்.புத்தகங்கள் அறிவைத் தெளிவாக்கும். சாதனையாளர்கள் அனைவரும், புத்தக வாசிப்பாளர்களாகவே இருந்துள்ளனர். புத்தக வாசிப்பு மன தைரியத்தைக் கொடுக்கும். எனவே, புத்தக வாசிப்பாளர்கள் எல்லாக் காலத்திலும், எந்தவித சூழலிலும் வாழ்வர். ஆகவே, வாசியுங்கள், வாழலாம். சென்னை புத்தக காட்சியில் எழுத்தாளர் நாஞ்சில் சம்பத், இவ்வாறு பேசினார்.- நமது நிருபர்-