| ADDED : ஜன 07, 2024 02:16 AM
சென்னை:செங்கல்பட்டு, தையூரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 65. இவர், சென்னை, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில், தன் நில பத்திரம் காணாமல் போனதாக, சில நாட்களுக்கு முன் புகார் அளித்தார்.நேற்று காவல் நிலையம் வந்த லட்சுமணனுக்கு, போலீசார் சார்பில் வழங்கப்பட்ட புகாருக்கான சி.எஸ்.ஆர்., எனும் சமூக பதிவேடு ரசீது எண் இல்லை எனவும், அதை வழங்கும்படி உதவி ஆய்வாளர் தமிழ்செல்வனிடம் கேட்டு உள்ளார்.உடனே தமிழ்செல்வன், சி.எஸ்.ஆர்., பதிவுகளை ஆய்வு செய்தபோது, லட்சுமணனுக்கு சி.எஸ்.ஆர்., வழங்கப்பட்ட ரசீது போலியானது என்பதும், பணியில் இருந்த புதுப்பேட்டை ஆயுதப்படைக் காவலர் கேளம்பாக்கத்தைச் சேர்ந்த விஜயகுமார் வழங்கியதும் தெரியவந்தது.இது குறித்து, வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் காவலர் விஜயகுமார் மீது புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், லட்சுமணன் மகன் குணசீலனும், காவலர் விஜயகுமாரும் நண்பர்கள்.குணசீலன் நில பத்திரம் காணாமல் போனது போன்று சி.எஸ்.ஆர்., வேண்டும் எனக்கேட்டதால், விஜயகுமார் போலியான சி.எஸ்.ஆர்., ரசீது தயாரித்து வழங்கியது தெரியவந்தது.இதையடுத்து போலீஸ்காரர் விஜயகுமார் மீது, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.