| ADDED : டிச 06, 2025 05:03 AM
சென்னை: போலீசாரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர், 99 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி, மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில், நேற்று முன்தினம் மாலையில், பா.ஜ., தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில், அக்கட்சியினர் தீபம் ஏற்ற முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதை கண்டித்து, சென்னை, தேனாம்பேட்டை பகுதியில், பா.ஜ., மாநில செயலர் வினோஜ் பி செல்வம், மாவட்ட தலைவர் கிரி உள்ளிட்டோர் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, நீலாங்கரை காவல் நிலைய எல்லையான பாலவாக்கத்தில், பா.ஜ.,வினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இரண்டு இடங்களிலும் போலீசாரின் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட, 99 பேர் மீது, தேனாம்பேட்டை மற்றும் நீலாங்கரை காவல் நிலைய போலீசார், நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.