| ADDED : ஆக 01, 2011 01:41 AM
சென்னை : ''சாலையோர சிறுகடை வியாபாரிகள் பிரச்னைகள் பரிசீலனை செய்யப்படும்,'' என்று தமிழக உள்துறை முன்னாள் செயலர் அம்புரோஸ் தெரிவித்தார்.சாலையோர சிறுகடை வியாபாரிகள் பிரச்னை குறித்த பொது விசாரணை நேற்று சென்னையில் நடந்தது. அமர்வு நீதிபதிகள் அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்தனர்.இதில் அமர்வு நீதிபதியாக இருந்த, தமிழக உள்துறை முன்னாள் செயலர் அம்புரோஸ் கூறும்போது, ''நான் முதல் முறையாக சாலையோர வியாபாரிகளை சந்திக்கிறேன். இவர்கள் பிரச்னையை எங்களிடம் கூறியிருக்கின்றனர். இவர்களது பிரச்னைகள் பரிசீலிக்கப்படும். பிரச்னைகள் தீர்வதற்கு குழு அமைத்து, ஆலோசிக்கப்படும். இதுவரை அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றி தெரியவில்லை. பிரச்னைகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என்றார்.
இதில் சாலையோர வியாபார சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் மகேஷ்வரன் கூறியதாவது:சாலையோர வியாபாரிகள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர் என்று போலீசாரால் அகற்றப்படுகின்றனர். சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோரம் வியாபாரம் செய்வதற்கு உரிமம் வழங்கவேண்டும்.சாலையோர வியாபாரிகளுக்கு என்று வியாபார மண்டலம் அமைத்து, தனி இடம் ஒதுக்க வேண்டும். அதில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும்.முறையாக சாலை வியாபாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கான தேசியக் கொள்கை உருவாக்க வேண்டும்.இவ்வாறு மகேஷ்வரன் கூறினார்.இதில் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கனகராஜ், முன்னாள் மாநகராட்சி ஆணையர் தேவசகாயம், ஆராய்ச்சியாளர் லட்சுமணன் அமர்வு நீதிபதிகளாக பங்கேற்றனர்.