பருவமழைக்கு முன், சென்னை புறநகர்ப் பகுதியில் வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள, 20 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி துவங்கியது. பருவமழையின் போது, போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், மணப்பாக்கம் கால்வாய் வழியாக, அடையாறு ஆற்றை சென்றடைகிறது. இதன் மொத்த நீளம் 6,900 மீட்டர். இந்த மணப்பாக்கம் கால்வாயை ஒட்டி, மவுலிவாக்கம், பெரிய பணச்சேரி, கெருகம்பாக்கம், மதனந்தபுரம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் வழியாக செல்லும் கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் மண்டி கிடக்கிறது. இதனால், உபரிநீர் வெளியேற வழியில்லாததால், கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் வெள் ளப் பாதிப்பை தடுக்க, பருவமழை துவங்குவதற்கு முன், போரூர் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயை தூரவார பொதுப்பணித் துறையால் திட்டமிடப்பட்டது. திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, அதற்காக, ஏழு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த சில நாட்களாக 6,900 மீட்டர் நீளத்திற்கு பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில், போரூர் ஏரியிலிருந்து அடையாறுக்கு செல்லும் மணப்பாக்கம் கால்வாய் தூர்வாரும் பணி துவங்கியது. பத்துக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தூர்வாரும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல, அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர், கொளத்துவாஞ்சேரி, பரணிபுத்தூர், மவுலிவாக்கம், பெரியபணச்சேரி, கெருகம்பாக்கம், கரையாம்பாக்கம், மதனந்தபுரம், மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், தரைப்பாக்கம் ஆகிய கிராமங்களில் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் தூர்ந்துபோய் உள்ளது. இதனால், மழைக் காலத்தில் கிராமங்களை சூழும் மழைநீர், வெளியேற வழியில்லாமல், மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் கால்வாய் மாயமாகிவிட்டது. எனவே, இந்த கிராமங்களிலுள்ள மழைநீர் வெளியேறும் கால்வாய்களை, பருவமழைக்கு முன் தூரவார, 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கால்வாய்கள் சீரமைக்கும் பணி, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது. இதன் மூலம் மழைக் காலத்தில், மழைநீர் வெளியேற வழி ஏற்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர், 'ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் போரூர் ஏரியிலிருந்து, அடையாறு ஆற்றுக்கு செல்லும் மணப்பாக்கம் கால்வாய் மற்றும் பல கிராமங்களில் மழைநீர் வெளியேறும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாருவது வழக்கம். இந்த ஆண்டு, இந்த இரு பணிகளுக்கும், மொத்தம் 20 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் பணிகள் நிறைவடையலாம்,' என்றார்.
- ஜி.எத்திராஜுலு -