திருவொற்றியூர், கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறில், வாலிபரை கத்தியால் வெட்டிய வழக்கில், ரவுடி கைது செய்யப்பட்டார்.எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் 'சுருட்டை' வெங்கடேஷ் என்ற வெங்கடேஷ், 26. ரவுடியான இவர் மீது, கொலை உட்பட பல வழக்குகள் உள்ளன.கடந்த, 10 நாட்களுக்கு முன், 22,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை, காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரிஷி கண்ணன் என்பவரிடம் விற்பனை செய்ய கொடுத்துள்ளார்.அதை விற்று 20,000 ரூபாயை கொடுத்த ரிஷி கண்ணன், மீதம் 2,000 ரூபாயை தரவில்லை.இது குறித்து வெங்கடேஷ் கேட்ட போது, கஞ்சாவின் தரம் தரம் சரியில்லை என, ரிஷி கண்ணன் கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், ஐந்து பேர் கும்பலை ரிஷி கண்ணன் வீட்டிற்கு அனுப்பி, கத்தியால் கைகளில் வெட்டி மன்னிப்பு கேட்க வைத்துள்ளார்.இதை வீடியோ பதிவு செய்து, வெங்கடேஷுக்கு அந்த கும்பல் அனுப்பியுள்ளது.இந்த கும்பலில் இருந்த ரவுடி வருண் என்பவர், தன் காதலிக்கு இந்த வீடியோவை அனுப்ப, அது சமூக வலைதளங்களில் பரவியது.இந்த வீடியோ குறித்து, திருவொற்றியூர் தனிப்படை போலீசார் விசாரித்து, சம்பவத்தில் தொடர்புடைய சுருட்டை வெங்கடேஷை நேற்று கைது செய்தனர். காயமடைந்த ரிஷி கண்ணன் மற்றும் ரவுடி கும்பலைச் சேர்ந்த வருண் உள்ளிட்ட ஐந்து பேரை தேடி வருகின்றனர்.