தி.நகர், உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்தப்பட்ட 'பாரதி உலா - 2023' நிகழ்வின் நிறைவு விழா, தி.நகர், வாணி மஹாலில் நேற்று நடந்தது.பாரதியார் சிந்தனைகளையும், தமிழ் மொழியின் சிறப்புகளையும், இன்றைய தலைமுறையினரிடையே பரப்பும் பணியை, பெரம்பூரில் உள்ள 'உரத்த சிந்தனை' வாசக எழுத்தாளர்கள் சங்கம் செய்கிறது.கடந்த 9 ஆண்டுகளாக, 'பாரதி உலா' எனும் தலைப்பில், மாணவர்களிடையே தமிழ் இசை, தமிழ்ப் பேச்சு மற்றும் நடனம் என போட்டி வைத்து, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.நடப்பாண்டு ஜன., 28 முதல் 31ம் தேதி வரை, தமிழகம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பை பகுதிகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, பாரதி உலா -- 2023 நிறைவு விழா, நேற்று காலை தி.நகரில் நடந்தது.இந்நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட மாணவ - மாணவியரின் நான்கு நடன நிகழ்ச்சி, பாடலரங்கம், பேச்சரங்கம் நடந்தது.பாரதி உலாவின் பரவலர்கள், பாரதி உலாவுக்காக களப்பணியாற்றியவர்கள் ஆகியோர் விழாவில் பாராட்டப்பட்டனர்.தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர். அவ்வை அருள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவ - மாணவியருக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.நிகழ்வில், பல்துறை சாதனையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர். அவ்வை அருள் பேசியதாவது:கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் கடற்கரைக்கு சென்ற ஏழு நண்பர்கள் இணைந்து, இலக்கிய வட்டத்தை ஆரம்பித்து, 'உரத்தசிந்தனை' என, பெயர் வைத்தனர்.மேலும், 20 ஆண்டுகளுக்கு முன் உரத்த சிந்தனை மாத இதழ் ஒன்றும் துவக்கப்பட்டது. இந்த அமைப்பு பாரதம் எங்கும் பரவி, பாரதி பாடல்கள் மற்றும் கருத்துக்களை பரப்பி வருகிறது. தமிழ்நாடு நாள் என்ற விழா ஜூலை 18ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை போட்டிகளில் வெல்லும் மாணவர்களுக்கு, 50,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும். தமிழ் வளர்ச்சித் துறை, 8 முதல் 80 வயது கடந்தோரை தொட்டு, துலாவி, அரவணைத்து செல்லும் துறையாக உள்ளது. தமிழ் திறனறித் தேர்வு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், 2.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். வெற்றி பெறும் 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும், இரண்டு ஆண்டுகளுக்கு 1,000 ரூாபய், அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.