| ADDED : பிப் 06, 2024 12:22 AM
பாண்டி பஜார், பாண்டி பஜார் ஜி.என்., செட்டி சாலை நான்கு முனை சந்திப்பில் 'சிக்னல்' முறையாக இயங்காததால், வாகனங்கள் தாறுமாறாக சென்று, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கோடம்பாக்கம் மண்டலம், பாண்டி பஜார் ஜி.என்., செட்டி சாலையில், கண்ணதாசன் சிலை நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் அமைந்துள்ளது.தி.நகர் மற்றும் அண்ணா சாலையை இணைக்கும் முக்கிய சாலை என்பதால், போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சந்திப்பில் உள்ள சிக்னல் பல மாதங்களாக இயங்காமல் இருந்தது.இதனால், நான்கு முனை சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. இதுகுறித்து நம் நாளிதழில், 2022 ஜூலையில் செய்தி வெளியானது.இதையடுத்து, அப்பகுதியில் புது சிக்னல் அமைக்கப்பட்டது. ஆனால், இன்னும் அந்த சிக்னல் முறையாக இயக்கப்படவில்லை. இதனால், நான்கு முனை சந்திப்பில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன.இதன் காரணமாக, சிக்னல் இல்லாத போது நீடித்த அதே நிலை, சிக்னல் இருந்தும் நீடிக்கிறது. இதில், நேற்று இரவு நான்கு முனையில் இருந்தும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.