காஞ்சிக்கு வரும் பக்தர்கள் அடிப்படை வசதிகள் இன்றி திணறல் * மத்திய அரசு ஒதுக்கிய பல கோடி நிதி வீணடிப்பு!
ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்திற்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில்,கோவில்களில் போதிய பாதுகாப்பு வசதிகள், முன்னேற்பாடுகள் இல்லாததால், அவர்கள் திண்டாடும் நிலை உள்ளது. பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட திட்டங்களும் செயலற்று போனதால், வெளியூர் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காஞ்சிபுரம், டிச. 25-பாரம்பரியம் மிக்க நகரங்களில் காஞ்சிபுரம் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு, 1,000 ஆண்டுகளை கடந்த கோவில்கள் வழிபாட்டில் உள்ளன. அதேபோல், 108 திவ்யதேசங்களில், 14 கோவில்கள் காஞ்சிபுரத்திலேயே உள்ளன. பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சியம்மன் கோவில், வரதராஜ பெருமாள், கச்சபேஸ்வரர் கோவில்கள் என, பல கோவில்கள் உள்ளன.இதன் காரணமாக தினமும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்கூட போதிய அளவு இல்லாததால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியூர் பக்தர்கள் பலர், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தனர். முறையாக தரிசன டிக்கெட் விற்கப்படாததால், பக்தர்கள் இலவச தரிசனத்தில் குவிந்ததால், கடும் நெரிசல் ஏற்பட்டது.ஒழுங்குபடுத்த போதிய கோவில் ஊழியர்கள் இல்லாததால், வெளி மாநில பக்தர்கள் மட்டுமின்றி, குடும்பத்துடன் வந்த உள்ளூர் பக்தர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகம் உள்ளதால், கோவில் ஊழியர்கள் முழுமையாக பணியாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வரிசையில் நின்று, அமைதியாகவும், அலைச்சலின்றியும் தரிசனம் செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்கிறது.திட்டங்கள் வீணடிப்புபக்தர்கள் வசதிக்காக, மத்திய அரசின், 'ஹெரிடே' திட்டத்தின் கீழ், 20 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால், தெருவிளக்கு, பொருட்கள் பாதுகாப்பு அறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை, மாநகராட்சி நிர்வாகத்தால் நாசமானது. பிரசாத திட்டத்தின் கீழ், 2019ல் 2 கோடி ரூபாய் செலவில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட நடைபாதைகள், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், அவற்றை முறையாக பராமரிக்காததால் திட்டத்தின் நோக்கமே வீணாகிறது. வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள், கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்களுக்கு செல்ல விரும்புகின்றனர். இவர்களுக்கு என, நிழற்குடையுடன் தனி நடைபாதை அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாகவே திட்டமிடப்பட்டு வந்தது. ஆனால், அவை நடைமுறைக்கு வரவே இல்லை. முக்கிய கோவில்களில் பேட்டரி கார் வசதியும் இல்லை.ஏகாம்பரநாதர் கோவில் அருகே, மத்திய அரசு கட்டி கொடுத்த பொருட்கள் பாதுகாப்பு அறை, எட்டு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இலவச கழிப்பறை, கட்டண கழிப்பறையாக மாறிவிட்டது.காமாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள அனுமதியில்லாத விடுதிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையிலேயே கார்கள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் வசிப்போர் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதைப் பற்றி மாநகராட்சி கண்டும், காணாமல் உள்ளது.அனைத்து கோவில்களையும், பேட்டரி காரில் சென்று ஒரே நாளில் தரிசிக்கும் வழிவகை செய்யும் வசதியும் கிடப்பில் உள்ளது. ஒவ்வொரு முறையும் ஆட்சி மாறினாலும், மாநகராட்சி அதிகாரிகள் மாறினாலும், பக்தர்கள் நீண்ட கால கோரிக்கை மட்டும் இன்னும் அப்படியேதான் உள்ளது.
ஆட்டோக்களில்
அடாவடி வசூல்காஞ்சிபுரம் செல்வோர் பெருமாள் கோவிலை தரிசனம் செய்தபின், காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்ல, ஆட்டோவை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதுவும், 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை அடாவடி கட்டணம் வசூலிக்கின்றனர். இவர்களிடம் வெளியூர் பக்தர்கள் மாட்டிக்கொண்டு, அன்றாடம் அவதிப்படுகின்றனர். பக்தர்களின் வசதிக்கேற்ப, நகர பேருந்து இயக்கப்பட்டால் இந்த பிரச்னை தீரும்.