மணலி: ''மணலியில் தொடரும் மின் தடையால் மக்கள் அவதியுற்று வரும் நிலையில், மின்வாரிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர்,'' என, முன்னாள் கவுன்சிலர் ஜோசப் குற்றஞ்சாட்டினார். மணலியில், 1.30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு, மின் கம்பி மற்றும் புதை மின் வடங்கள் மூலம் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி, சாலைமா நகர், ஹரிகிருஷ்ணபுரம், பாடசாலை தெரு, எட்டியப்பன் தெரு, திருவேங்கடம் தெரு போன்ற பகுதிகளில், இரவு, காலை நேரங்களில் மின் தடை ஏற்படுவதால், மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இரவு தடையாகும் மின்சாரத்தால், துாக்கமிழந்து மக்கள் மொட்டை மாடி, வீதிகளில் தஞ்சமடைகின்றனர். காலையில் ஏற்படும் மின்தடையால், பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோர், கடும் அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. மாறாக, அலட்சியமாக பதிலளிக்கின்றனர் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் கவுன் சிலர் ஜோசப் கூறியதாவது: மணலியில் மின் வாரியம் சார்ந்த பிரச்னைகள் அதிகளவில் உள்ளன. ஆனால், அதிகாரிகள் எந்த புகாருக்கும் செவிமடுப்பதே கிடையாது. சாலைமா நகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு தினமும் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டேன். அதற்கு அலட்சியமாக பதிலளிக்கின்றனர். மக்களின் அடிப்படை தேவையான மின்சாரம், சீராக வழங்குவதில் அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.