டி.பி.எல்., ஹாக்கி போட்டி ஐ.ஓ.பி., அணி வெற்றி
சென்னை :டி.பி.எல்., ஹாக்கி போட்டியில், ஐ.ஓ.பி., அணி, 3 - 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு சார்பில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஹாக்கி சங்கம் இணைந்து நடத்தும், டி.பி.எல்., எனும் திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி போட்டி, சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் சுற்றில், ஐ.ஓ.பி., அணி ஜி.எஸ்.டி., அணியை எதிர்த்துப் போட்டியிட்டது. இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் ஐ.ஓ.பி., வெற்றி பெற்றது. அணி வீரர், பட்ராஸ் டிர்கி தன் அணிக்காக, மூன்று பெனால்டி கோல் அடித்து அசத்தினார். தெ.ரயில்வே தோல்வி அடுத்து நடந்த போட்டியில் ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணி, தெற்கு ரயில்வே அணியை எதிர்த்து மோதியது. இதில் ஏ.ஜி.ஓ.ஆர்.சி., அணி 3 - 2 என்ற கோல் கணக்கில், தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் இந்தியன் வங்கி அணி, வருமான வரித்துறை அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய இந்தியன் வங்கி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில், வருமான வரி துறை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.