கேலோ இந்தியா மகளிர் வூஷு திருவள்ளூர் மாவட்டம் அசத்தல்
சென்னை, கோவையில் நடந்த மாநில அளவிலான 'கேலோ இந்தியா வூஷு' போட்டியில், திருவள்ளூர் மாவட்ட வீரர் - வீராங்கனையர் பதக்கங்களை குவித்தனர். சீனா தற்காப்பு கலைகளின் ஒன்றான 'வூஷூ' போட்டியானது, பள்ளிக்கல்வித் துறை விளையாட்டிலும் சேர்க்கப்பட்டு, மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், மாநில அளவிலான கேலோ இந்திய மகளிர் வூஷு போட்டி, கோவையில் நடந்தது. மாநில முழுதும் இருந்து, 400க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர் . இதில்,திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்று, பல்வேறு வயது பிரிவில், ஒரு தங்கம், ஆறு வெள்ளி, ஆறு வெண்கலம் என, மொத்தம் 13 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். பதக்கம் வென்ற வீரர்கள், நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப்பை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். நிகழ்வில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராமன், வூஷூ சங்கத்தின் தலைவர் விஜயராகவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.