மர்மமான முறையில் கண் மருத்துவர் இறப்பு
சென்னை, வீட்டிற்குள் மர்மமான முறையில் கண் மருத்துவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை, நொளம்பூர், அடையாளம்பட்டு பிரதான சாலை தனியார் அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் பழனிவேல், 51. இவர், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில், தலைமை மருத்துவராக பணியாற்றி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இவரது மனைவி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மகள்கள் இருவரும், பெங்களூரில் தங்கி படித்து வருகின்றனர். அவர்கள் நேற்று காலை பழனிவேலின் மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், வெகுநேரமாக அழைப்புகளை ஏற்காததால், அவருடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் நண்பர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து, நொளம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பழனிவேல் படுக்கை அறையில் மர்மமான முறையில், இறந்து கிடந்துள்ளார். நொளம்பூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.