| ADDED : நவ 19, 2025 04:08 AM
சென்னை: மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவால், மீண்டும், மீண்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, 29 வயது இளைஞருக்கு, வடபழனி சிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். இதுகுறித்து, மருத்துவமனையின் நரம்பியல் துறை நிபுணர்கள் பிரபாஷ் பிரபாகரன், விவேக் அய்யர், ரித்தேஷ் ஆர்.நாயர், எஸ்.செல்வின் ஆகியோர் கூறியதாவது: மூளையில் ஏற்பட்ட ரத்த உறைவால், 29 வயது இளைஞருக்கு மீண்டும், மீண்டும் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்தபோது, அவரது இதயம் மற்றும் கால்களில் ரத்த உறைவு கட்டிகள் கண்டறியப்பட்டது. இவ்வாறு ஒரே நபருக்கு மூன்று முக்கிய உறுப்புகளில் ரத்த கட்டிகள் உருவாவது மிகவும் அரிதானது. இவருக்கு, 2022ல் பக்கவாதம் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின், தொடர்ந்து மருந்துகளை உட்கொள்ளாமல், பாதியில் நிறுத்தியதால் இரண்டாம் முறையாக மீண்டும் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது. இவற்றை சரி செய்ய, அவரது காலில் தடைகளின்றி ரத்த ஓட்டத்தை சீராக்குவதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின், மூளை மற்றும் இதயங்களில் இருந்த ரத்த கட்டிகளும், அறுவை சிகிச்சை செய்து சீராக்கப்பட்டன. தற்போது இளைஞர் நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.