பட்டாவுக்கு ரூ.15,000 லஞ்சம் ஆவடியில் சர்வேயர் சிக்கினார்
ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், தென்றல் நகரைச் சேர்ந்தவர் சந்திரன், 30. இவர், சில மாதங்களுக்கு முன், ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில், வீட்டிற்கு 'ஆன்லைன்' பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தார்.இடத்தை அளந்து, பட்டா வழங்க பரிந்துரை செய்ய, பொன்னேரியைச் சேர்ந்த சர்வேயர் சுமன், 35, என்பவர், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.லஞ்சம் தர விரும்பாத சந்திரன், இது குறித்து திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.அதன்படி, சந்திரன், நேற்று மதியம் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில், ரசாயனம் தடவிய பணத்தை, சுமனின் உதவியாளர் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த பொன்னையன், 28, என்பவரிடம் கொடுத்துள்ளார்.அப்போது, அங்கு மறைந்திருந்த திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கையும் களவுமாக பிடித்தனர்.விசாரணையில், சர்வேயர் சுமன் கூறியதன்படி, பொன்னையன் பணம் பெற்றது தெரிந்தது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.