உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி சேவை கிடைக்காமல் திண்டாடும் பொன்னே கவுண்டன்புதூர் மக்கள்

வங்கி சேவை கிடைக்காமல் திண்டாடும் பொன்னே கவுண்டன்புதூர் மக்கள்

அன்னூர் : வங்கி சேவை மையம் திறக்கப்பட்டு ஒன்றரை மாதமாகியும் செயல்படாததால், பொன்னேகவுண்டன்புதூர் மக்கள் அவதிப்படுகின்றனர். பொன்னேகவுண்டன்புதூரில் ஒன்றரை மாதங்களுக்கு முன் இந்தியன் வங்கியின் சேவை மையம் திறக்கப்பட்டது. மையம் திறக்கப்பட்டும் செயல்படாமல் உள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இப்பகுதி மக்கள் கூறியதாவது: இந்தியன் வங்கியின் முழுமையான கிளை 25 ஆண்டுகளுக்கு முன் இங்கு துவக்கப்பட்டது. பின் பல்வேறு காரணங்களால், இக்கிளை வாரத்தில் மூன்று நாட்கள் இங்கும், மூன்று நாட்கள் வாகராயம்பாளையத்திலும் இயங்கியது. சில ஆண்டுகளில் இங்குள்ள வங்கி கிளை மூடப்பட்டது. இதனால் பொன்னே கவுண்டன்புதூர், அருகம்பாளையம், செட்டிபாளையம், செந்தாம்பாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட 20 கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்ததன் விளைவாக கடந்த மே மாதம் பொன்னே கவுண்டன்புதூரில் இந்தியன் வங்கி சேவை மையம் திறக்கப்பட்டது. மண்டல அதிகாரிகள் பங்கேற்று திறந்து வைத்தனர். 'ஒரு அலுவலர் இங்கு பணிபுரிவார். வாகராயம்பாளையம் கிளையில் கணக்கு வைத்துள்ளவர்கள் இங்கு சேவை பெறலாம்' என்று அதிகாரிகள் அறிவித்தனர். இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், மையம் திறக்கப்பட்டு ஒன்றரை மாதத்துக்கு மேல் ஆகியும் இதுவரை செயல்படவில்லை. இதனால் மக்கள் 6 கி.மீ., தொலைவில் உள்ள வாகராயம்பாளையம் சென்று வங்கி சேவை பெற வேண்டி உள்ளது. அதுவும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டும் உள்ளது. வங்கி சேவை மையம் செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மக்கள் தெரிவித்தனர். வங்கி அதிகாரிகள் கூறுகையில், ''சேவை மையத்திற்கான கட்டமைப்பு வசதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் செயல்படத்துவங்கும்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்