'கோவையில் ரேடியோ காலர் கருவி பொருத்தும் முயற்சியில், ஆண் யானை இறந்ததால், இத்திட்டம் கைவிடப்படவில்லை' என, வனத்துறையினர் திட்ட வட்டமாக தெரிவித்தனர். தமிழகத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. யானைகள் ஊருக்குள் படையெடுப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள, தமிழக வனத்துறைக்கு, 'ரேடியோ காலர்' கருவி வழங்கப்பட்டது. முதற்கட்டமாக, கோவை வனப்பகுதியில் யானைக்கு, 'ரேடியோ காலர்' கருவி பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில் தப்பிய ஆண் யானை, குழியில் விழுந்து பரிதாபமாக இறந்தது.இதுகுறித்து, உயர் அதிகாரிகள் கூறியதாவது: கோவை வனப்பகுதியில், 'ரேடியோ காலர்' கருவி பொருத்தும் முயற்சியில், ஆண் யானை பலியான சம்பவம், எதிர்பாராதது. எனினும் திட்டம் கைவிடப்படவில்லை. ஆண் யானையை விட, முதிர்ச்சியடைந்த பெண் யானையின் வழிகாட்டுதலின் பேரில் தான், யானைக் கூட்டம் செல்லும். எனவே, பெண் யானைக்கு, 'ரேடியோ காலர்' கருவி பொருத்த வனத்துறையினர் முயற்சி மேற்கொள்வர். இதன் வெற்றிக்கு பின், ஈரோடு உள்ளிட்ட பிற மாவட்ட வனப்பகுதியில், இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -