| ADDED : ஜூலை 20, 2024 01:17 AM
அன்னுார்;'சுற்றுச்சூழல் மேம்பட பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்,' என மாணவர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டது. சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், 'நெகிழியை தவிர்ப்போம்' என்னும் கருத்தை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நடந்தது.மாசு கட்டுப்பாட்டு வாரிய கோவை வடக்கு மண்டல பொறியாளர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக்குகள் மண்ணில் மக்குவதற்கு பல நுாறு ஆண்டுகளாகும். இதனால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தாங்கள் வசிக்கும் பகுதியில் ஆண்டுக்கு ஒரு மரக்கன்று நட்டு பராமரிக்க வேண்டும்,'' என்றார்.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் விஜயகுமார் பரிசு வழங்கினர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி வளாகத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன. ஸ்ரீராம் கார்த்திக் பாலிமர் நிறுவன மேலாளர் ராமச்சந்திரன், தலைமை ஆசிரியை விமலா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.