| ADDED : ஜூன் 21, 2024 02:03 AM
கோவை;''கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம், தி.மு.க., அரசின் தோல்வி,'' என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழக அரசியல் வரலாற்றில் இன்று மிகப்பெரிய கருப்பு தினம். கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தி.மு.க., அரசின் கையாலாகாத தனத்தை இது காட்டுகிறது. ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தி.மு.க., அரசின் போலி திராவிட மாடலை காட்டுகிறது. ஆட்சிக்கு வந்த உடன் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றனர். ஆனால், அதுகுறித்த எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழகம் முழுவதும் போதைக் கலாசாரம் உள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா உள்ளது. தற்போது கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு தீர்வு மதுவிலக்கை கொண்டு வருவதே. சி.பி.ஐ., விசாரணைக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். தி.மு.க., அரசு இச்சம்பவத்துக்கு முழுமையாக பொறுப்பு ஏற்று, தவறை ஒப்புக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் தனது கடமையை தட்டிக்கழிக்க கூடாது. துறை அமைச்சர் முத்துசாமி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இச்சம்பவத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும். இவ்வளவு பெரிய சம்பவம் நடந்து இரு நாட்கள் ஆகிறது. ஆனால், முதல்வர் இன்னும் அங்கு செல்லவில்லை. மக்களை பார்க்க அவருக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. இது தி.மு.க., அரசின் மிகப்பெரிய தோல்வி. இவ்வாறு, அவர் கூறினார்.