பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், பாதசாரிகள் நடந்து செல்வதற்காக நடைபாதை அமைக்கப்பட்ட பகுதிகளில், தடுப்புக் கம்பி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகரில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், சந்திப்புகளில் வாகனங்கள் எளிதாக சென்று திரும்பும் வகையிலும், ஆங்காங்கே 'ரவுண்டானா' அமைக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட அஞ்சலக ரோடு, தாலுகா ரோடு, உடுமலை ரோடு பகுதிகளில், மழைநீர் வடிகால் மற்றும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நடைபாதையொட்டிய பகுதியில், பாதுகாப்பு தடுப்புக் கம்பி அமைக்கப்படவில்லை.நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பாதசாரிகள், பாதுகாப்பின்றி ரோட்டில் நடந்து செல்கின்றனர். எனவே, நடைபதை ஒட்டி தடுப்பு கம்பிகள் அமைத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.மக்கள் கூறியதாவது: ரோடுகளை விரிவுபடுத்தி, விபத்தில்லா பயணம் மேற்கொள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டும் பயனில்லாமல் உள்ளது. தடுப்பு கம்பிகள் அமைத்தால், பாதசாரிகள் நடைபாதையை மட்டுமே பயன்படுத்தும் நிலை ஏற்படும். ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும் தடுக்கப்படும்.தற்போது, சிலர், நடைபாதை வரை கடைகளை விரிவுபடுத்தியும், வாகனங்கள் நிறுத்தி வைத்தும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர். எனவே, நடைபாதை அமைக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பு கம்பி அமைத்து, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.