கோவை;கோவை நேரு விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இவ்விடத்தில், பல ஆண்டுகளாக வ.உ.சி., உடற்பயிற்சி சாலை சார்பில், உடற்பயிற்சிக் கூடம் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில், இந்த உடற்பயிற்சி கூடத்துக்கு கட்டணமாக, ரூ.300 நிர்ணயிக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து, உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வரும் வ.உ.சி., உடற் பயிற்சி சாலையை சேர்ந்தவர்கள், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அறக்கட்டளை தலைவர் செல்வராஜ் கூறியதாவது:மாநகராட்சி இடத்தை மட்டுமே வழங்கியது. அதில் கட்டடம் கட்டி, தேவையான அனைத்து கருவிகளையும் வங்கிக் கடன் வாயிலாக வாங்கி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறோம்.இதற்காக கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. ஏழை மாணவர்களின் வாழ்வில், மாநகராட்சி விளையாடுகிறது. உதவி கமிஷனரிடம் முறையிட்ட போது, கருவிகளை எடுத்து செல்லுங்கள் எனக்கூறுகிறார். இத்தனை ஆண்டுகள், கருவிகள் வாங்கி, உடற்பயிற்சி கூடத்தை பராமரித்தது, குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்தது நாங்கள் தான்.குடிநீர், மின்கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களையும் செலுத்தியுள்ளோம். நாங்கள் கட்டணம் வசூலிக்காத நிலையில், மாநகராட்சிக்கு எப்படி கட்டணம் செலுத்துவது. இத்தனை காலம் உடற்பயிற்சிக் கூடத்தை கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம், தற்போது கட்டணம் வசூலிப்பது ஏன்.இவ்வாறு, அவர் கேள்வி எழுப்பினார்.
கவுன்சில் தீர்மானம்'
கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன் கூறுகையில், ''இதுநாள் வரை அவர்கள், மாநகராட்சியின் எவ்வித உத்தரவும் பெறாமல் உடற்பயிற்சி கூடத்தை நடத்தி வந்தனர். தற்போது அனைத்தையும் சீர்படுத்த ஒப்பந்தம் விட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டண நடைமுறை, மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பயிற்சியாளர் இல்லாமல் உடற்பயிற்சி செய்வோருக்கு ரூ.150, பயிற்சியாளருடன் உடற்பயிற்சி செய்தால், ரூ.300 என, இருவிதமாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விருப்பப்பட்டால், உடற்பயிற்சி கருவிகளை எடுத்துச் செல்லலாம். அதற்கு பதிலாக, மாநகராட்சியே கருவிகளை பொருத்தி பராமரிக்கும்,'' என்றார்.