கோவை:கோவை மாவட்டத்தில் வசிக்கும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று துவக்கி வைத்தார்.கோவை மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 3,095 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. வரும், 16ம் தேதிக்குள் வாக்காளர்களுக்கு, வீடு வீடாகச் சென்று, பூத் சிலிப் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தெற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பாப்பநாயக்கன் பாளையம், அம்மன்குளம் பகுதியில் வசிப்போருக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை, மாவட்ட தேர்தல் அதிகாரியான, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று துவக்கி வைத்தார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை கமிஷனர் செல்வசுரபி, உதவி கமிஷனர் செந்தில்குமரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.வாக்காளர்களுக்கு பூத் சிலிப் மட்டுமின்றி, ஓட்டளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, வாக்காளர் கையேடு வழங்கினார். இது, எட்டு லட்சத்து, 68 ஆயிரத்து, 893 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.முன்னதாக, 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, ஆட்டோக்களில் ஒளிரும் பேனர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை, கலெக்டர் துவக்கி வைத்தார்.டி.ஆர்.ஓ., ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.கண்ணம்பாளையம் ரங்கநாதபுரத்தில், இதற்கு முன், 50 சதவீதத்துக்கும் குறைவாக ஓட்டுகள் பதிவான ஓட்டுச்சாவடியில் இம்முறை அதிகப்படுத்த, அப்பகுதி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.