உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துவரம் பருப்பு விலை கிடு கிடு உயர்வு  ரேஷனிலும் கிடைக்காமல் மக்கள் அவதி 

துவரம் பருப்பு விலை கிடு கிடு உயர்வு  ரேஷனிலும் கிடைக்காமல் மக்கள் அவதி 

கோவை;ரேஷன் கடைகளில் கடந்த, இரண்டு மாதங்களாக துவரம்பருப்பு தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், வெளிச்சந்தைகளிலும், விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சாமானிய மக்களை சிரமத்தில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக, வல்லுநர்களின் கணிப்பு படி, மளிகை பொருட்களின் விலை, செப்., -டிச., மாதங்களில் அதிகரிக்கும். ஜன., மாதத்தில் விலை குறைந்து , ஏப்., மே மாதம் வரை விலை சீராக இருக்கும். ஆனால், நடப்பாண்டில் மளிகை பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் துவரம்பருப்பு விலை உயர்வு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, ஏப்., மாதம் ஒரு கிலோ 140 ரூபாயாக இருந்தது. கடந்த மாதம், 160 ஆக இருந்து தற்போது, 195 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுதவிர, கடந்த மாதம் 600 ரூபாய்க்கு விற்ற குருமிளகு, தற்போது 780 ரூபாய்க்கும், கருப்பு சுண்டல் 70 லிருந்து 110 ரூபாய்க்கும், முந்திரி 550 லிருந்து 850 ரூபாய்க்கும், ஏலக்காய் 1800 ரூபாயிலிருந்து 3000 ரூபாய்க்கும், பட்டானி 80 ரூபாயிலிருந்து 130 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. இதுபோன்று, பெரும்பாலான மளிகை பொருட்களின் விலை, காய்கறி விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

'டிசம்பர் வரை விலை நீடிக்கும்'

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவை மாவட்ட செயலாளர் கணேசன் கூறுகையில்,'' துவரம்பருப்பு மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. மழை காரணமாக விளைச்சல் குறைவு ஏற்பட்டு வரத்தும் குறைந்ததால், விலை அதிகரித்துள்ளதாக தெரிகிறது. முந்திரி, ஏலக்காய், பூண்டு, பட்டாணி என பெரும்பாலான பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. நவ., -டிச., மாதம் வரை, விலை இதுபோன்றே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை