கோவை;கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில், சேர்க்கைக்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குன ரகத்தின் கீழ், 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் டிப்ளமோ படிப்புகளுக்கு, 19,530 இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு, பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இணைய வழியில் கடந்த மே 10 முதல் 31ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இரு கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டதில், 9 ஆயிரம் பேர் வரை, சேர்க்கையை உறுதி செய்துள்ளனர். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 7 ஆயிரம் பேர் வரை சேர்ந்துள்ளனர்.நடப்பாண்டும், ஒட்டுமொத்த இடங்களைவிட, குறைந்த அளவிலான மாணவர்களே சேர்ந்துள்ளனர். 10 ஆயிரம் இடங்கள் நிரம்பாமல் உள்ளதால், மீதமுள்ள இடங்களை கல்லூரிகளே நிரப்பிக் கொள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மாணவர்கள் நேரடியாக அந்தந்த கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்'
கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறுகையில், கல்லூரியில் மொத்தம் 380 இடங்கள் உள்ளன. 260 இடங்களில் மாணவிகள் சேர்ந்துள்ளனர். 120 காலியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது. திருமணமானவர்களும் விண்ணப்பிக்கலாம், என்றார்.