UPDATED : மார் 25, 2024 02:40 PM | ADDED : மார் 25, 2024 01:29 PM
சென்னை: வெள்ளிங்கிரி மலைக்கு சென்று விட்டு திரும்பும் போது, 5 பேர் உயிரிழந்த நிலையில், மலையேற்றத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை வனத்துறை வழங்கி உள்ளது. கோவையில் உள்ள வெள்ளிங்கிரி மலைக்கு கடந்த ஒன்றை மாதங்களில் சென்று விட்டு திரும்பும் போது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன், கோவையை சேர்ந்த கிரண், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுப்பாராவ், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன், தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் ஆகிய 5 பேர் உயிரிழந்தனர். வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழக வனத்துறையின் சார்பாக, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு,இருதய நோய் சம்மந்தப்பட்வர்கள், மூச்சுதிணறல் உள்ளவர்கள், உடல்பருமனாக உள்ளவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், வயதில் மூத்தவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள், மலைக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். மலைக்கு சென்று உயிரிழப்புகள் ஏற்படும் போது அவர்களின் குடும்பம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.மேலும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்திற்கு கொண்டு வருவதற்கு வனத்துறைக்கு கடும் சவாலாக உள்ளது. மேலும் அனைவரின் நலன்கருதி மேற்கொண்ட அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.