உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர் விளைச்சல் தொழில்நுட்பம் வேளாண் துறை அறிவுரை

உயர் விளைச்சல் தொழில்நுட்பம் வேளாண் துறை அறிவுரை

பெ.நா.பாளையம்;பண்ணை இயந்திரங்கள் வாயிலாக, பயறு வகை பயிர்களில் உயர் விளைச்சலுக்கான தொழில் நுட்பங்கள் குறித்து, வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: இன்றைய வேளாண்மையில் பண்ணை வேலைகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், கூலியும், செலவும் அதிகரித்து வருகின்றன. இதனால் பயிர்களின் உற்பத்தி செலவு அதிகரித்து, விவசாயிக்கு கிடைக்கும் வருமானமும் குறைகிறது. இதற்கு மாற்றாக, நிலத்தை தயார் செய்வது முதல் அறுவடை வரை அனைத்து விவசாய பணிகளும் இயந்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. பயறு வகை பயிர்களான பாசிப்பயிறு மற்றும் உளுந்தம் பயிர்களுக்கு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட, 8 கிலோ விதையை உயிர் உரங்களான ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா மற்றும் உயிர்க்கொல்லியான சூடோமோனாஸ் கலவையுடன் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். இவை டிராக்டரினால் இயங்கும் கொத்து கலப்பையுடன் இணைந்த விதை விதைக்கும் கருவிக்கொண்டு வரிசைக்கு வரிசை, 45 செ.மீ., மற்றும் செடிக்கு செடி, 10 செ.மீ., இடைவெளியில் விதைக்கலாம். இவ்வாறு விதை கருவிக்கொண்டு விதைக்கும் போது, ஏக்கருக்கு பயிர்களின் எண்ணிக்கை, 88 ஆயிரம் என்ற அளவில் பராமரிக்கப்படும். இயந்திரம் வாயிலாக விதைக்கும் போது ஏக்கருக்கு, 6.0 கிலோ விதை போதுமானது.மேலும், பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை காப்பாற்ற டிராக்டரால் இயங்கும் கொத்து கலப்பை உதவியுடன், வரிசைக்கு வரிசை உள்ள இடைவெளியில், செடிகளுக்கு சேதாரம் இல்லாமல், மண்ணைக் கிளறி விட வேண்டும். இதனால் மானாவாரியில் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படும். பயிர் முதிர்ச்சி அடைந்தவுடன் அல்லது காய்கள் முற்றியவுடன் இயந்திரம் வாயிலாக பயிர்கள் நேரடியாக அறுவடை செய்யப்பட்டு, தரமான தானியங்கள் பெறலாம்.இவ்வாறு, வேளாண் துறையினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை