| ADDED : ஜூன் 28, 2024 11:31 PM
அன்னுார்;'ஊரை விட்டு ஒதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைதி கூட்டத்தில் ஆர்.டி.ஓ., எச்சரிக்கை விடுத்தார்.அன்னுார் அருகே வடக்கலுாரில் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த, 250 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் காதல் திருமணம் செய்த ஒன்பது குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அபராதம் செலுத்தி, அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வற்புறுத்துவதாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டது.ஓராண்டாக வருவாய்த் துறையினர் பேச்சு நடத்தியும், தீர்வு ஏற்படவில்லை. இதையடுத்து, சுந்தரம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 'வருவாய் துறை இதுகுறித்து விசாரித்து நான்கு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அன்னூர் தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சு நடந்தது. இரு தரப்பினரும் பங்கேற்றனர்.கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் பேசுகையில், ''சில குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது தவறு. இந்த நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக இதை கைவிட வேண்டும். இல்லாவிட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். நாகரிக காலத்தில் இது போன்ற நடவடிக்கைகள் மிகவும் வேதனை ஏற்படுத்துகிறது,'' என்றார்.ஒரு தரப்பினர் பேசுகையில், 'காலம் காலமாக இந்த நடவடிக்கை செய்து வருகிறோம். இனிமேல் அரசுக்கு ஒத்துழைப்பு தருகிறோம். ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மாட்டோம்' என்றனர்.பேச்சுவார்த்தையில், தாசில்தார் நித்திலவள்ளி, இன்ஸ்பெக்டர் நித்யா மற்றும் வருவாய் துறையினர் பங்கேற்றனர்.