கோவை: ''சுற்றுச்சூழல் சார்ந்த குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்கும் வாய்ப்புள்ளது; எனவே, சூழலை பாதுகாப்பது நமது தார்மீக கடமை,'' என, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசினார்.உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று, கோவை மாநகர போலீசார் மற்றும் ஊர்காவல் படை சார்பில் காந்திபுரம் சிக்னல், செல்வபுரம் உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள், வாகன ஓட்டிகளுக்கு, 500க்கும் மேற்பட்ட மரங்கள் வழங்கப்பட்டன.காந்திபுரம் சிக்னலில் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்கள், எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். மேலும், அதுசார்ந்த குற்றங்கள் வரும் வாய்ப்புள்ளது என்ற கோணத்தில், வருமுன் தடுப்பதே நமது கடமை. எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அரசின் பங்களிப்பு மட்டுமின்றி, மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும்.நாம் உயிர் வாழ ஆக்ஸிஜன் முக்கியம். வெளியேற்றப்படும் கரியமில வாயுவை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எனவே, போலீஸ் வாகனங்கள் எண்ணிக்கை, ஆக்ஸிஜன் தேவை, வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு ஆகியவை குறித்து, அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தோம்.பி.ஆர்.எஸ்., மைதானத்தில் மட்டும், 15 ஆயிரம் மரங்கள் தேவைப்படுகின்றன. ஏற்கனவே, அங்கு 2,500 மரங்கள் உள்ள நிலையில் சமீபத்தில், 1,000 மரக்கன்றுகள் புதிதாக நட்டுள்ளோம். இன்னும் கூடுதலாக நட உள்ளோம். பொது மக்களும் வீட்டு வளாகங்களில் மரம் வளர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ரோஹித் நாதன் ராஜகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.