கோயம்புத்துார் புத்தகக் கண்காட்சிக்குள் நுழைந்தவுடன், புத்தகங்களின் வாசம் வாசகர்களுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா சார்பில், இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. நேற்று காலையில், வாசகர்கள் கூட்டம் கூட்டமாக கண்காட்சி வளாகத்துக்குள் வர துவங்கினர். இதில், மாணவர்கள் கூட்டம்தான் அதிகம்.கண்காட்சியில், தமிழகம் முழுவதும் உள்ள புத்தகப் பதிப்பாளர்கள், தங்கள் பதிப்பித்த புத்தகங்களை 285 ஸ்டால்களில் விற்பனைக்கு வைத்துள்ளனர்.ஆன்மிகம், வரலாறு, கதைகள், கவிதை நுால்கள், குழந்தை இலக்கியம், சங்க இலக்கியம், நவீன இலக்கிய நுால்கள் மற்றும் ஆங்கில நுால்கள் என, 10 லட்சம் நுால்களுக்கு மேல் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.எழுத்தாளர் ஜெயமோகனின் அனைத்து படைப்புகளையும், விஷ்ணுபுரம் பதிப்பகம் தனி அரங்கில் வைத்துள்ளது. நற்றிணை பதிப்பகத்தில் பல புத்தகங்களுக்கு, 30 சதவிதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது.இந்த புத்தக கண்காட்சியில் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும், 10 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கண்காட்சி, 10 நாட்கள் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, வரும் 28 வரைநடக்கிறது.
'தினமலர்' பதிப்புகள்!
'தினமலர்' நாளிதழின் 124வது அரங்கில், 'தினமலர்' நாளிதழில் வாரமலர், சிறுவர் மலர், ஆன்மிக மலரில் வெளியான கட்டுரைகள், செய்தி பிரிவினர் எழுதிய கட்டுரைகள் புத்தக வடிவில் வாங் கலாம். சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன. 'தினமலர்' நாளிதழுக்கான ஆண்டு சந்தாவையும் இங்கு செலுத்தலாம்.