பொள்ளாச்சி : கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் சரிவர எரியாததால், வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.பொள்ளாச்சி நகரில் இருந்து, வால்பாறை வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான வாகனங்கள், கோட்டூர் ரோடு, ரயில்வே மேம்பாலம் வழியாகவே செல்கின்றன. இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்கள் பாதுகாப்புடன் செல்லும் பொருட்டு, பாலத்தின் இருபுறத்தில் உள்ள தடுப்புச் சுவரில், மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை, நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக, இந்த விளக்குகள் சரிவர எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணும்போதும், கனரக வாகன ஓட்டுநர்கள், முகப்பு விளக்கை 'ைஹ பீம்' நிலைக்கு தள்ளி, அதிவேகமாக வாகனங்களை இயக்குகின்றனர்.இதனால், மற்ற வாகன ஓட்டுநர்கள், நிலை தடுமாறுகின்றனர். மேலும், விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உருவாகிறது.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:ரயில்வே மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகள், இரவு நேரத்தில், பெரும்பாலும் எரிவதில்லை. நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.அதேபோல, மேம்பாலத்தில், ஒளிபிரதிபலிக்கும் வகையிலான எவ்வித எச்சரிக்கை அறிவிப்பும் கிடையாது. மேம்பாலத்தை கடக்கும் சில வாகன ஓட்டுநர்கள், அதிவேகமாக வாகனங்களை இயக்கி, முந்தி செல்லவே முனைப்பு காட்டுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.