பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சாராயம் விற்பனை செய்த மாவடப்பை சேர்ந்த ராமனை, ஆழியாறு போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, மஞ்சநாயக்கனுாரில் கடந்த மாதம், 28ம் தேதி மகேந்திரன், ரவிச்சந்திரன் ஆகியோர் திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டதால், கோவை தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.ரவிச்சந்திரன் மனைவி தமிழரசி, கொடுத்த புகாரின் பேரில், ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.ஆனைமலை இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐ., வள்ளியம்மாள் மற்றும் போலீசார், மஞ்சநாயக்கனுாரில் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், மஞ்சநாயக்கனுாருக்கு மலைத்தேன் விற்க வந்த, மாவடப்பு பழங்குடியின குடியிருப்பை சேர்ந்த ராமன், சாராயம் காய்ச்சி குடிப்பது தெரிந்து, கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார், மகேந்திரன், செந்தில், முத்துக்குமார், லட்சுமணன் ஆகியோர் சாராயம் வாங்கினர்.கிராமத்தில் துக்க நிகழ்ச்சியின் போது, சாராயம் குடித்தனர். கடந்த மாதம், 28ம் தேதி ரவிச்சந்திரனும், மகேந்திரனும், டாஸ்மாக் மதுபானத்தை, அங்குள்ள பாழடைந்த கட்டடத்தில் இருந்த தண்ணீரை கலந்து குடித்ததும் தெரியவந்தது.இதையடுத்து, மாவடப்பை சேர்ந்த ராமன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், '41ஏ' சம்மன் வழங்கினர். மேலும், தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இந்நிலையில், ஆழியாறு போலீசார், மாவடப்பை சேர்ந்த ராமனை,50, கைது செய்தனர்.போலீசார் கூறுகையில், 'சாராயம் விற்ற மாவடப்பை சேர்ந்த ராமன், பழங்குடியின குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று தலைமறைவாக இருந்தார். நேற்று, ஆழியாறில் உள்ள மருந்துக்கடைக்கு மாத்திரை வாங்க வந்த ராமனை கைது செய்து விசாரிக்கிறோம்' என்றனர்.