| ADDED : ஜூலை 22, 2024 01:51 AM
கோவை;படுக்கையிலுள்ள நோயாளிகளின் பேச்சு குறைபாட்டை சரிசெய்து, கண்களின் சைகை வாயிலாக தகவல்களை தெரிவிக்கும் வகையில், நோயாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட, 'நேத்ராவாத்' எனும் ஒரு புதுமையான தொழில்நுட்பத்தை, அமிர்த விஷ்வ வித்யாபீடம் உருவாக்கியுள்ளது.இந்த தனித்துவம் வாய்ந்த தொழில்நுட்பம், மருத்துவ சாதனங்கள் மற்றும் உயிரி பொருட்களுக்கான துவக்க நிலை சுகாதார தொழில் நுட்பமாகும்.நேத்ராவாத் என்று பெயரிடப்பட்ட இச்சாதனம், அமிர்தா பல்கலையால் உருவாக்கப்பட்டு, அமிர்தா மருத்துவமனையில் சோதிக்கப்பட்டது.பேச முடியாத நோயாளிகள், தங்களது தேவைகளை சரியாக உணர்த்துவதற்கு, நேத்ராவாத் புதுமையான கண் சைகை அடிப்படையிலான, இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.அமிர்தா பல்கலையின், 'ஹட்லேப்ஸ்' என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் 'ரோபோட்டிக்ஸ்' ஆராய்ச்சி மையத்தின் கீழ், இத்தொழில்நுட்பம் நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து, அமிர்த விஷ்வ வித்யாபீடம், ஹட்லேப்ஸ் இயக்குனர் மற்றும் 'டி2எச் இன்னோவேஷன்ஸ்' நிறுவனர், ராஜேஷ் கண்ணன் மேகலிங்கம் கூறுகையில், 'நாங்கள் 'நேத்ராவாத்' தொழில்நுட்பத்தை, சமூகத்துக்கு வழங்க உள்ளோம். கண் சைகைகளின் வாயிலாக, தகவல்தொடர்புகளை பரிமாறும் நேத்ராவாத், பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு பயனளிக்கும். நரம்பியல் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மக்களின், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும்' என்றனர்.