பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், ஒவ்வொரு கடைக்கும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் இருப்பதால், அசைவப்பிரியர்கள் கவலை அடைகின்றனர்.பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட இறைச்சிக்கடைகள் செயல்படுகின்றன. பெரும்பாலான கடைகளில், சுகாதார விதிகள் சரிவர பின்பற்றப்படுவது கிடையாது.அவ்வப்போது, துறை ரீதியான அதிகாரிகள், அக்கடைகள் மீது நடவடிக்கை எடுத்தாலும், சுகாதாரமற்ற இறைச்சி விற்பனையே மீண்டும் தொடர்கிறது. இது ஒருபுறமிருக்க, ஒவ்வொரு கடைக்கும், கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் காணப்படுகிறது.குறிப்பாக, ஒரு கிலோ இறைச்சி, 240 முதல், 300 ரூபாய் வரை, கடைகளுக்கு ஏற்றாற்போல் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால், அசைவப்பிரியர்கள், வெகுவாக பாதிக்கின்றனர்.அசைவப் பிரியர்கள் கூறியதாவது: இறைச்சிக்கடைகளில், நாட்டுக்கோழி என்ற பெயரில் 'கலர் லெகான்' கோழிகள் விற்கப்படுகின்றன. தவிர, ஒவ்வொரு கடைக்கும் பலதரப்பட்ட விலை நிர்ணயிக்கப்படுகிறது.எந்தவொரு கடைகளிலும், விலைப்பட்டியல் வைக்கப்படுவதும் கிடையாது. ஏற்கனவே, சுகாதாரமான இறைச்சி கிடைக்காத நிலையில், கூடுதல் விலைக்கு அதனை வாங்கிச்செல்ல வேண்டியுள்ளது.துறை ரீதியான அதிகாரிகள் அவ்வபோது, ஆய்வு நடத்தி, சுகாதார விதிகள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.