கோவை, : புதிய காருக்கான பணத்தை பெற்றுக்கொண்டு, டெலிவரி செய்ய தாமதம் செய்ததால், நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.கோவை, வடவள்ளி, ஓம் கணேஷ் நகரை சேர்ந்த சாகுல்ஹமீது, சரவணம்பட்டியிலுள்ள கார் விற்பனை நிறுவனத்தில், மாருதி சுசூகி டிசைர் கார் வாங்குதற்காக, 2022, ஜூன், 2ல், முன் பதிவு செய்தார். இதற்காக வங்கியில் கடன் பெற்று, 5.30 லட்சம் செலுத்தினார். ஐந்து நாட்களில் கார் டெலிவரி செய்யப்படும் என உறுதி அளித்தும், குறிப்பிட்ட தேதி வரை டெலிவரி செய்யப்படவில்லை. முழுத்தொகை பெற்றுக்கொண்ட பிறகும், கார் வழங்காமல் ஏமாற்றியதால், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பிறகு, நான்கு மாதம் கழித்து, சாகுல்ஹமீதுவிற்கு கார் வழங்கினர்.வங்கியில் பெற்ற கடனுக்கு நான்கு மாத தவணை செலுத்திய பிறகு கார் டெலிவரி செய்யப்பட்டதால் அவருக்கு வருமான இழப்பு ஏற்பட்டதோடு, மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வக்கீல் வி.ராஜசேகர் வாயிலாக வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நாமக்கல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.விசாரித்த ஆணைய தலைவர் ராமராஜ், ''கார் டீலர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபட்டதால், மனுதாரருக்கு இழப்பீடாக, மொத்தம், நான்கு லட்சம் ரூபாய், வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.